ஜபக் மூவிஸ் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் பொன் மாணிக்கவேல். 2011 ல் வெளியான கண்டேன் படத்தில் இயக்குனராக அறிமுகமான A C முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ளார். D இமான் இசையமைத்துள்ளார். K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். T சிவானந்தேஸ்வரன் படத்தை தொகுத்துள்ளார்.
பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவா முதன் முறையாக காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் பொன் மாணிக்கவேல் மனைவி அன்பரசி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபாகர் காவல்துறை அதிகாரி பெருவளத்தான் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன் அர்ஜூன் K மாறன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன் நசரதுல்லா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முகேஷ் திவாரி நகைக்கடை சேட்டாக நடித்துள்ளார். கோலமாவு கோகிலா பட நடிகர் சார்லஸ் வினோத் காவல்துறை அதிகாரி கைலாஷாக நடித்துள்ளார். சுதன்ஷூ பாண்டே பத்திரிநாத் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் நாகேஷ் பேரனும் நடிகர் ஆனந்த பாபு மகனுமான பிஜேஷ் நாகேஷ் போலிஸ் காண்ஸ்டபில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உதய் மகேஷ் காவல் துறை கமிஷனராக நடித்துள்ளனர்.
பொன் மாணிக்கவேல் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் 19-11-2021 முதல் ஒளிபரப்பாகின்றது.
கதைக்கரு:
காவல்துறை அதிகாரிகள் தான் சார்ந்த துறைக்கு வேலை செய்ய வேண்டுமா?. மக்களுக்காக வேலை செய்ய வேண்டுமா?. என்ற வினா மேலோட்டமாக பார்த்தால் இரண்டு கேள்வியும் ஒரே அடிப்படையானதாக தெரியும். காவல்துறை என்பது சட்ட எல்லைகளுக்குட்பட்டு வேலை செய்ய வேண்டும். ஆனால் சட்டத்தை ஏமாற்றி அதன் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிப்பவர்கள் இருக்கும் சமூகத்தில் எப்படி துறை அடிப்படையில் வேலை செய்வது. இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் பொன் மாணிக்கவேல் திரைப்படம்.
கதை:
நீதிபதி ஸ்ரீநிவாசன் சுட்டு கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு தலையில்லாத முண்டமாக கிடக்கின்றார். நீதிபதி கொலை தமிழகம் முழுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்த வழக்கை நேர்மையான கோபம் நிறைந்த அதிகாரி பெருவளத்தான் விசாரித்து வருகின்றார். பரபரப்பான இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் காவல்துறைக்கு உதவ சேலத்தில் போலிஸ் அதிகாரியாக இருந்து தனது பதவியை ராஜினாமா செய்த பொன் மாணிக்கவேலை மீண்டும் பணியமர்த்துகின்றனர்.
பொன் மாணிக்கவேல் தன் மனைவி அன்பரசியுடன் சென்னையில் இருக்கின்றார். அன்பரசி தன் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றாள்.
பொன் மாணிக்கவேலுக்கு உதவ இந்த வழக்கை விசாரித்த பெருவளத்தானையும் ஒரு காண்ஸ்டபிளையும் நியமிக்கின்றனர். பெருவளத்தான் வேகமாக விசாரணையை மேற்கொள்ள நினைப்பவர். போலிஸ் கான்ஸ்டெபிள் ஆர்வக்கோளாறு கொண்டவர். பொன் மாணிக்கவேலின் விசாரணை மெத்தனப்போக்காக இருப்பதாக நினைக்கும் பெருவளத்தானுக்கும் பொன் மாணிக்கவேலுக்கும் இடையே பனிப்போர் நிலவுகின்றது. ஒரு சமயம் ராயபுரம் ரௌடியிடம் கடுமையான விசாரணையை மேற்கொள்கின்றார். பொன் மாணிக்கவேல் அந்த கைதியை விட்டுவிட சொல்கின்றார். பெருவளத்தானின் குழந்தையை கடத்தி பெருவளத்தானை கொல்ல முயலும் ரௌடி கும்பலிடமிருந்து காப்பாற்றுகின்றார் பொன் மாணிக்கவேல். அதனால் அவர்களிடையே நடைபெற்ற பனிப்போர் முடிவுக்கு வருகின்றது. இருவரும் இணைந்து செயல்படுகின்றனர்.
பொன் மாணிக்கவேல் சேலத்தில் பணிபுரிந்த போது நகைக்கடை முதலாளி சேட் தன்னிடம் பணிபுரிந்த பெண்னை பலாத்காரம் செய்து கொலை செய்த காரணத்திற்காக கைது செய்கின்றார். சாட்சியங்கள் சரிவர இல்லாத காரணத்தால் விடுதலையாகின்றான் நகைக்கடை சேட். பாதிக்கப்பட்ட பெண்னின் தாய் பொன் மாணிக்கவேலின் துப்பாக்கியை எடுத்து சேட்டை சுட முயல்கின்றாள். முடியாமல் போக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறக்கின்றாள். இந்த சம்பவம் காரணமாக பொன் மாணிக்கவேல் தண்டணை பெறுகின்றார். அதனால் தன் பதவியையும் ராஜினாமா செய்கின்றார்.
மீண்டும் நீதிபதி கொலைவழக்கு காரணமாக விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றார்.
நீதிபதிக்கு நெருக்கமான இன்ஸ்பெக்டர் ரத்தினவேலை விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவரை விசாரிக்க செல்கின்றனர். இவர்கள் விசாரிக்க செல்லும் அனைத்து இடங்களிலும் ஒருவன் இவர்களை பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றான். ரத்தினவேல் வீடு பூட்டியிருக்கின்றது. பக்கத்து வீட்டில் அவர் வந்தால் பேச சொல்லி சொல்கின்றனர். பொன் மாணிக்கவேலை தொடர்பு கொண்டு ரத்தினவேல் பேசுகின்றார். நான் முக்கியமான வேலையில் இருக்கின்றேன், நாளைக்கு வந்து பார்க்கின்றேன் என்று சொல்கின்றார். சில நிமிடத்தில் ஒரு தெரியாத நம்பரிலிருந்து ரத்னவேலுக்கு கொலைமிரட்டல் மெசேஜ் வருகின்றது. ரத்னவேல் மாணிக்கவேலிடம் தன்னை காப்பாற்றுமாறும் தான் ஒரு ஸ்டார் ஹோட்டலில் இருப்பதாகவும் சொல்கின்றான். ஆனால் அங்கே காரில் வெடிகுண்டு வெடித்து ரத்னவேல் கொல்லப்படுகிறான். இந்த கொலையை செய்தது தங்களை பின் தொடர்ந்த் நபர்தான் என்று சந்தேகிக்கின்றான் பெருவளத்தான். ஆனால் இந்த கொலைக்கு வேறு யாரோதான் காரணம் என்று சொல்கின்றார் பொன் மாணிக்கவேல்.
முன் நீதிபதி இப்போது இண்ஸ்பெக்டர் என்று கொலை வழக்கு பரபரப்பாகின்றது. இறந்த ரத்னவேல் போனிலிருந்த தகவல்களை சேகரிக்க சொல்கின்றார் பொன் மாணிக்கவேல். அந்த மொபைலில் இருந்த அனைத்தையும் யாரோ காப்பி எடுத்துவிட்டு அனைத்தையும் நீக்கியுள்ளனர். ஆனால் எந்த மொபைல் மூலம் காப்பி எடுக்கப்பட்டது. அதன் தற்போதைய இருப்பிடத்தை பொன் மாணிக்கவேலிடம் சொல்கின்றான் பெருவளத்தான். போலிஸ் படையுடன் அங்கே செல்லுமாறு சொல்கின்றார் பொன் மாணிக்கவேல். அங்கே இவர்களை விசாரணை செய்யும் இடங்களுக்கு இவர்களை பின் தொடர்ந்தவன் தான் இருக்கின்றான். அவன் பெயர் கைலாஷ். அவனும் போலிஸ் அதிகாரிதான் இந்த விசாரணையில் பொன் மாணிக்கவேலுக்கு தெரியாமல் நியமிக்கப்பட்டவர் என்று தெரிந்து கொள்கின்றான்.
கைலாஷ் காப்பி செய்த மொபைல் ஃபைலில் ஒரு போட்டோ இருக்கின்றது. அதில் நீதிபதி ஸ்ரீநிவாசன், இன்ஸ்பெக்டர் ரத்னவேலு மற்றும் தொழிலதிபர் அர்ஜூன் K மாறன் மூவரும் இருக்கின்றனர். அதில் ஸ்ரீநிவாசன் மற்றும் ரத்னவேலு கொல்லப்பட்டுவிட்டனர். அடுத்ததாக மாறன் தான் கொல்லப்படுவார் என்று கணிக்கின்றது காவல்துறை. ஆனால் மாறனோ காவல்துறை பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என்று சொல்கின்றார். ஆனாலும் காவல்துறை அவருக்கே தெரியாமல் அவரை பாதுகாக்க முடிவு செய்கின்றனர்.
ஒரு நாள் இரவு அவரை கொல்ல முயற்சி நடக்கின்றது. கொலைகாரன் தப்பிவிடுகின்றான். உயிருக்கு பயந்த மாறன் பொன் மாணிக்கவேலிடம் உதவி கேட்கின்றான். பொன் மாணிக்கவேலோ பத்து கோடி பணம் வாங்கிக்கொண்டு அவரை பாதுகாக்க உறுதி கொடுக்கின்றான்.
இதற்கிடையில் கைலாஷ் மாறனை கொலை செய்ய முயற்சித்து தப்பி சென்ற நபரை கண்டுபிடிக்க அக்கம்பக்கத்து CCTV கேமராக்களை ஆராய்கின்றான். மாறனை கொலை செய்ய முயற்சித்தது வயதான பெரியவர் நசரதுல்லா என்று கண்டு பிடிக்கின்றான்.
நசரதுல்லா மகனும் மருமகளும் ஒரு விபத்தில் இறக்கின்றனர். அந்த சோகத்தில் தொழிலை சரிவர நடத்தாத காரணத்தால் பெரும் நஷ்டமடைகின்றார், அதனால் தற்கொலை செய்துகொள்ள முயல்கின்றார். தன் பேத்தி தான்யாவிற்காக அந்த முயற்சியை கைவிடுகின்றார் நசரதுல்லா. தன் பேத்தியை வளர்த்து ஆளாக்குகிறார். தான்யாவோ கல்லூரியில் படித்துக்கொண்டே பார்ட்டி, வரவேற்ப்பு நிகழ்சி போன்றவற்றிற்கு தொகுப்பாளினியாக இருப்பவர். ஒரு நிகழ்ச்சியில் அவளை பார்க்கும் மாறன் அவள் மீது ஆசைகொண்டு மெசேஜ் அனுப்புகின்றார். தான்யா காவல்துறையில் புகார் கொடுக்க செல்லும் போது யாருமே அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் சமூக வலைதளத்தில் Me Too புகார் கொடுக்க அது வைரலாகின்றது. மாறன் கைது செய்யப்படுகின்றார். ஆனால் தன் மொபைல் தொலைந்துவிட்டதாக சட்டத்தை ஏமாற்றி ஸ்ரீநிவாசன் மற்றும் ரத்னவேல் உதவியால் தப்பிக்கின்றார். விடுதலையான சில நாட்களில் ரயில் தண்டவாளத்தில் தான்யா பிணமாக கிடக்கின்றார்.
மாறன் அலுவலகத்திலேயே அவரை கொல்ல முயற்சி நடக்கின்றது. அதிலிருந்து மாறனை காப்பாற்றுகின்றார் பொன் மாணிக்கவேல். மாறனின் நம்பிக்கைக்குறியவராகின்றார் பொன் மாணிக்கவேல்.
ஒருமுறை ஒரு கொலைகாரன் மாறனை கொல்ல முயலும் போது பொன் மாணிக்கவேல் கண்ணாடியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த நிகழ்வால் மாறன் பொன் மாணிக்கவேலை முழுதாக நம்புகின்றார்.
பொன் மாணிக்கவேல் மாறனுக்கு நம்பிக்கைக்குறியவராக மாற முயற்சித்ததும் காவல்துறையின் ஏற்பாடு என்று காவல்துறை உயர் அதிகாரி சொல்கின்றார்.
மருத்துவமனையிலிருந்து வரும் பொன் மாணிக்கவேல் மாறனை கொல்ல முயற்சித்தவனை கண்டுபிடித்து கைது செய்ய போகும் போது அந்த கொலைகாரன் அன்பரசியை கொல்ல முயல்கின்றான். அந்த கைகலப்பில் கொலைகாரன் இறக்கின்றான். மாறனிடம் உங்களை காப்பாற்ற முயலும் போது தான் பிரச்சனை. அவரின் பிரச்சனைக்குறிய அடிப்படை காரணத்தை சொன்னால் தான் அவரை காப்பாற்ற முடியுமென்று பொன் மாணிக்கவேல் சொல்கின்றார். பொன் மாணிக்கவேலை முழுதாக நம்பி மாறன் உண்மையை சொல்கின்றான்.
பத்ரிநாத் உலகின் மிகப்பெரிய பணக்காரன். இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் செல்வாக்கு மிக்கவன். தன் தொழிலின் பங்குதாரர். அது மட்டுமின்றி பெண் பித்தன். பெண்களை துன்புறுத்தி இச்சையை தீர்த்துக்கொள்ளும் சைக்கோ. அவன் பார்வையில் தான்யா மாட்டினாள். அவளை அனுபவிக்க விரும்பினான், அவனுக்காகத்தான் தான் தான்யாவை தொடர்பு கொண்டதாகவும் அது எதிர்மறையாக மாறியதையும் சொல்கின்றான் மாறன். விடுதலையாகி வந்ததும் தான்யாவை கடத்தி மாறன், ஸ்ரீநிவாசன் மற்றும் ரத்னவேல் அனுபவித்ததையும் பிறகு அவளை கொலை செய்ய முடிவெடுத்தோம். ஆனால் அவள் தனக்கு வேண்டுமென்று பத்ரிநாத் சொன்னான். அதற்காக தான்யா போன்ற ஒரு பிணத்தை வைத்து அவள் இறந்ததாக சொல்லிவிட்டோம். இன்றும் பத்ரிநாத் குடோனில் தான் தான்யா இருப்பதாக சொல்கின்றார் மாறன். இந்த உண்மையை தெரிந்துகொள்ளத்தான் பொன் மாணிக்கவேல் மாறனுடன் நெருக்கமாக இருந்தார். இது தெரிந்தவுடன் மாறனை கொல்கின்றார் பொன் மாணிக்கவேல்.
தான்யாவை அங்கிருந்து காப்பாற்றுகின்றார் பொன் மாணிக்கவேல்.
நசரத்துல்லாவால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலிஸ் பாதுகாப்பை கேட்கின்றான். போலிஸ் பாதுகாப்பில் இருக்கும் பத்ரிநாத் மீது கொலை முயற்சி நடக்கின்றது. அதனால் தன் வீடுதான் பாதுகாப்பானது என்று அங்கே செல்கின்றான்.
இதற்கிடையில் கைலாஷ் ஸ்ரீநிவாசையும், ரத்னவேலை கொன்றது பொன் மாணிக்கவேல் தான் என்று கண்டுபிடிக்கின்றார். அதுமட்டுமின்றி சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தால் சிறைக்கு சென்ற பொன் மாணிக்கவேல் உடன் நசரதுல்லாவும் இருந்ததை அறிந்து கொள்கின்றான். பத்ரிநாத்தையும் பொன் மாணிக்கவேல் கொன்றுவிடுவார் என்றும் கணிக்கின்றான்.
தனது வீட்டின் கீழ் அறையில் இருக்கும் பத்ரிநாத்தை பொன் மாணிக்கவேல் கொல்கின்றான். அந்த கொலையை மறைக்க ஒரு பெரியவரின் பிணத்தை சுட்டு அவர்தான் பத்ரிநாத்தை கொன்றதாகவும். தான் அவரை சுட்டு கொன்றதாகவும் சொல்கின்றார் பொன் மாணிக்கவேல்.
நசரதுல்லாவையும் தான்யாவையும் யாருக்கும் தெரியாமல் மணிப்பாலிற்கு அனுப்புகின்றார் பொன் மாணிக்கவேல்.
பொன் மாணிக்கவேலை சந்திக்கும் கைலாஷ் சாட்சியே இல்லாமல் அனைவரையும் கொன்றுவிட்டேன் என்று நினைக்காதே. நான் நிரூபிப்பேன் என்று சொல்கின்றான். முயற்சி செய் என்று சொல்லிவிட்டு செல்கின்றார் பொன் மாணிக்கவேல்.
பாராட்டுகுறியது:
பெருவளத்தான் கதாப்பாத்திரத்தில் பிரபாகர் அருமையாக நடித்துள்ளார்.
கைலாஷ் கதாப்பாத்திரத்தில் சார்லஸ் நடிப்பு அருமை.
தொழிலதிபர் அர்ஜூன் K மாறன் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
மறைந்த இயக்குனர் மகேந்திரன் நசரத்துல்லா கதாப்பாத்திரத்தில் சில காட்சிகளே வந்தாலும் முகபாவனைகளில் நடிப்பை கொடுத்துள்ளார்.
பிஜேஷ் நாகேஷ் கதாப்பாத்திரம் நகைச்சுவைக்காக பயன்படுத்த முயற்சித்துள்ளனர். கொடுக்கப்பட்ட சிறிய பாத்திரத்திலும் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
நெருடலானவை:
வழக்கமான காவல்துறை கதை, புதுமையாக எதையாவது சொல்லியிருக்கலாம்.
காவல்துறையில் பலர் இருக்கும் போது பொன் மாணிக்கவேலை விசாரணை அதிகாரியாக நியமித்ததில் சினிமாத்தனம் மட்டுமே தெரிகின்றது. அதில் அழுத்தமில்லை.
முதன் முறையாக போலிஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பிரபு தேவா இன்னும் கொஞ்சம் நல்ல கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
கதாநாயகி கதாபாத்திரம் அழுத்தமில்லாத ஒன்று. அதனால் நிவேதா பெத்துராஜிற்கு பெரிய வேலை இல்லை.
மாறனை ஒருவன் கொல்ல வருகின்றான். அவனிடம் கண்ணாடியால் குத்து வாங்குகின்றார் பொன் மாணிக்கவேல். பின் அவனை பொன் மாணிக்கவேல் அவன் மனைவியை கொல்ல வரும்போது கொல்கின்றார். இந்த பாத்திரப்படைப்பு தொடர்பே இல்லாத ஒன்றாக இருக்கின்றது. மாறனை அவன் கொல்ல முயலகாரணம் என்ன?. என்று புரியவில்லை.
பிஜேஷ் நாகேஷ் கதாப்பாத்திரம் நகைச்சுவையாக படைக்கப்பட்டு பாதியிலே தொங்கவிடப்பட்டது ஏன்?.
தொகுப்பு:
நம் வாழ்கையில் ஏராளமான விஷயங்களை கடந்து செல்வோம். அவற்றில் சில விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும். ஏராளமான விஷயங்கள் நம் மனவோட்டத்தில் கரைந்து போகும். இந்த அடிப்படையில் பொன் மாணிக்கவேல் திரைப்படமும் நம்மை கடந்து செல்லும் நினைவில் நிற்காத ஒன்றாகும்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.