2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ள படம் ஜெய் பீம். T J ஞானவேல் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். S R கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தை தொகுத்துள்ளர்.
ஜெய் பீம் திரைப்படம் 02-11-2021 முதல் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகின்றது.
ஜெய் பீம் திரைப்படத்தில் சூர்யா அட்வகேட் சந்துரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லிஜோமோல் ஜோஸ் செங்கேணி கதாப்பாத்தில் நடித்துள்ளார். K மணிகண்டன் ராஜாகண்ணு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் I G பெருமாள்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரெஜிஷா விஜயன் மைத்ரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். ராவ் ரமேஷ் தலைமை அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். இயக்குனர் தமிழ் sub Inspector அதாவது துணை ஆய்வாளர் குருமூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர்குட் சுப்ரமணி தலைமை காவலராக நடித்துள்ளார். M S பாஸ்கர் அட்வகேட் சங்கரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஜெயபிரகாஷ் காவல்துறை தலைமை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுஜாதா சிவக்குமார் சுப்புலக்ஷ்மி கதிர்வேல் கதாப்பாத்தில் நடித்துள்ளார். பேபி ஜோஷியா மயா ராஜாகண்ணு செங்கேணி மகள் அல்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதைக்கரு:
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல்நிலையத்தில் நடைபெற்ற லாக்கப் மரண உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படத்தை கொடுத்துள்ளனர். இருளர் இனத்தை சேர்ந்த ராஜாகண்ணு மற்றும் பார்வதி வழக்கை மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் வெற்றிகரமாக நடத்தி பார்வதிக்கு ஆதரவாக வக்கீல் சந்துரு வாதாடி நீதியை நிலைநாட்டினார். பழங்குடியின மக்கள் மீது பொய்வழக்குகள் போடப்பட்டு, நில பட்டாக்கள் பெறாமல் இருக்கும் அவர்களுக்காக நீதி வாங்கி கொடுத்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் தொடங்க அடிப்படையாக இருந்த வழக்கு இது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜெய் பீம்.
கதை:
விழுப்புரம் மாவட்டம் கோணமலை கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்தவர் ராஜாகண்ணு மற்றும் செங்கேணி. இவர்களது மகள் அல்லி. இவர்கள் பாம்பு எலி பிடிப்பதில் வல்லவர்கள், அதே போல் பாம்பு கடிக்கு வைத்தியம் பார்ப்பவர்கள். அங்கே அறிவொளி இயக்கத்தின் மூலம் அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பவர் ஆசிரியை மைத்ரி.
கதிர் வேல் ஆளும் கட்சியை சேர்ந்த ஊர்தலைவர்.. சுப்புலக்ஷ்மி அவரது மனைவி. சுப்புலக்ஷ்மி நகைகளை அணிந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது அவளது அறைக்குள் பாம்பு வந்து விடுகின்றது. பாம்பை பிடிக்க ராஜாகண்ணுவை அழைத்து வருகின்றனர். ராஜாகண்ணு பாம்பை பிடித்து வெளியே செல்லும் போது கதிர்வேலு மற்றும் சுப்புலக்ஷ்மி வெளியூர் செல்ல காரில் கிளம்ப கார் கோளாராகி நிற்கின்றது. ராஜாகண்ணு காரை தள்ளி வண்டியை ஓட வைக்கின்றான்.
ராஜாகண்ணு தன் மனைவி செங்கேணி கர்பமுற்று இருப்பதை நினைத்து மகிழ்கின்றான். தான் செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு நீ கர்பமாக இருப்பதால் நான் மட்டும் வேலைக்கு போகின்றேன் என்று சொல்லிவிட்டு செல்கின்றான்.
கதிர்வேல் மற்றும் சுப்புலக்ஷ்மி ஊரிலிருந்து வந்து பார்க்கும் போது நகைகள் காணாமல் போயிருப்பதை அறிந்து காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர். கதிர்வேல் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கில் காவல்துறைக்கு அழுத்தம் வருகின்றது. கதிர்வேல் மற்றும் சுப்புலக்ஷ்மி ராஜாகண்ணுதான் திருடியிருப்பான் என்று சந்தேகப்படுகின்றனர்.
காவல்துறை அதிகாரி குருமூர்த்தி ராஜாகண்ணுவை கைது செய்ய செல்லும் போது அங்கே ராஜாகண்ணு இல்லை. செங்கேணியை கைது செய்து போலிஸ் ஸ்டேசன் அழைத்து செல்கின்றனர். அவளுடன் ராஜாகண்ணு சகோதரன் மொசக்குட்டி மற்றும் மைத்துனன் இருட்டப்பனையும் கைது செய்து அழைத்து செல்கின்றனர். போலீஸ் ஸ்டேசனில் மூவரையும் அடித்து துன்புறுத்துகின்றனர்.
ராஜாகண்ணு போலிஸில் சரணடைகின்றான், செங்கேணியை வெளியில் விடுகின்றனர். ராஜாகண்ணுவை போலிஸ் சித்ரவதை செய்து நகையை திருடியதை ஒத்துக்கொள்ள சொல்கின்றனர். ராஜாகண்ணு ஒத்து கொள்ள மறுக்கின்றான். ராஜாகண்ணு, மொசக்குட்டி மற்றும் இருட்டப்பன் மூவரையும் போலிஸ் சித்ரவதை செய்கிறது. ஒருநாள் போலிஸ் ராஜாகண்ணு, மொசக்குட்டி மற்றும் இருட்டப்பன் சிறையிலிருந்து தப்பிவிட்டதாக சொல்கின்றனர்.
வங்கீல் சந்துரு மக்கள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்ற வழக்குகளுக்கு கட்டணம் வாங்காமல் வாதிடுபவர்.
நேர்மையான போலிஸ் அதிகாரி I G பெருமாள்சாமி. காவல்துறை மீது மிகுந்த பற்று கொண்டவர். ஆனால் சந்துருவோ பல போரட்டங்களை காவல்துறைக்கு எதிராக மேற்கொள்கின்றார். இருவரும் குணத்தில் ஒன்றாக இருந்தாலும் கருத்தியல் முரண்பாடு இருவருக்குமிடையில் இருக்கின்றது.
தன் கணவனைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசிரியர் மைத்ரி உதவியுடன் வக்கீல் சந்துரு சென்று சத்திக்கின்றாள் செங்கேணி. ராஜாகண்ணு வழக்கை முழுமையாக படிக்கின்றார். செங்கேணியிடம் உண்மையை மறைக்காமல் நடந்த அனைத்தையும் சொல்ல சொல்கின்றார். வழக்கின் முழு விவரங்களையும் குறிப்பாக காவல்துறை அறிக்கையையும் படிக்கும் சந்துரு இந்த வழக்கில் தவறு, மற்றும் எந்த ஒரு நியாயத்துவத்தையும் கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றார். இது மிகவும் சிக்கலான வழக்கு காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சிகள் இல்லை காவலர்களுக்கு சாதகமாக ஏராளமான விஷயங்கள் இருக்கின்றது என்று உணர்கின்றார். செங்கேணியின் வழக்கறிஞராக ஆட்கொணர்வு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றார். அதை நீதி மன்றம் ஏற்றுகொண்டு விசாரணை தொடங்குகின்றனர்.
போலிஸ் அறிக்கைகள் முறையாக இல்லாத காரணத்தால் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக சந்துரு சொல்கின்றார். ஆட்கொணர்வு மனுவில் குறுக்கு விசாரணை இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் கேராளாவில் மிசா சமயத்தில் நடைபெற்ற ராஜன் ஆட்கொணர்வு விசாரணையின் போது. கேரள உயர்நீதி மன்றம் குறுக்கு விசாரணைக்கு அனுமதி கொடுத்ததை மேற்கோள் காட்டி குறுக்கு விசாரணைக்கு அனுமதி வாங்குகின்றார் சந்துரு.
அப்போது காவல்துறையிலிருந்து தப்பி சென்ற மூவரும் ஒரு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றதை, ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கியதையும் காவல் துறை தனது அறிக்கையில் அவர்களை சாட்சியாக்கி பதிந்திருந்தனர். மருத்துவர் மகேஷிடம் குறுக்கு விசாரணை செய்யும் சந்துரு அவர் அலோபதி மருத்துவர் இல்லை என்று நிரூபிக்கின்றார். மருத்துவமனை எங்கே இருக்கின்றது என்று கூட விசாரணை அறிக்கை கொடுத்த காவல்துறை அதிகாரியால் சொல்ல முடியவில்லை. இரண்டு காவல் துறை அதிகாரியும் ஒரே அறிக்கையை ஒரே கையெழுத்தில் கொடுத்திருப்பதாக நிரூபிக்கின்றார். மருத்துவமனை காவல் நிலையத்திற்கு கிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் மருந்தகம் காவல் நிலையத்திற்கு மேற்கில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்றது. இந்த முரண்பாட்டை எடுத்துரைக்கின்றார். அதனால் இந்த வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுக்கு மாற்ற அனுமதி கேட்கின்றார். நீதிபதிகள் காவல்துறை விசாரனை அறிக்கைகள் தவறாக இருப்பதை ஏற்றுகொண்டு தமிழகத்திலுள்ள போலிஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும். அந்த அதிகாரியின் பெயரை சந்துருவையே பரிந்துரைக்கவும் சொல்கின்றனர். சந்துருவின் கோரிக்கை பேரில் I G பெருமாள்சாமி கீழ் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.
இடையில் மொசக்குட்டி தன் ரைஸ்மில் முதலாளிக்கு போன் செய்து தாங்கள் மூணாறில் இருப்பதாக தகவலை அரசு தலைமை வழக்கறிஞர் பதிவு செய்கின்றார். மூனாறிலிருந்து வந்த போனை ஆய்வு செய்ய செங்கேணியுடன் மூனாறு செல்கின்றார் சந்துரு. மூனாறில் உள்ள டெலிபோன் பூத் உரிமையாளர் மீதான குறுக்கு விசாரணையில் காவல்துறையினர் தான் மூனாறு சென்று போன் செய்ததாக நிரூபிக்கின்றார் சந்துரு.
I G பெருமாள் சாமி மற்றும் சந்துரு இருவரும் சேர்ந்து விசாரணையை தொடங்குகின்றனர். பல குற்றவாளிகள் மீது பொய்வழக்கு போட்டு வேறு சிறைச்சாலைகளில் பல கைதிகளை அடைத்து வைத்துள்ளனர். அதில் எதிலாவது ராஜாகண்ணு, மொசக்குட்டி மற்றும் இருட்டப்பன் இருக்கின்றார்களா என்று தேடுகின்றனர். அப்போது கடலூர் காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி மற்றும் கடலூர் எல்லைப்பகுதியில் ராஜாக்கண்னு விபத்தில் இறந்து கிடப்பதாக அறிந்து அங்கே சென்று விசாரிக்கின்றனர். சந்துருவிற்கு ராஜாகண்ணு விபத்தில் இறந்திருக்க வாய்ப்பில்லை, போலிஸ் தான் அவர்களை அடித்து கொன்றிருப்பதாக சந்தேகிக்கின்றார். அதை நிரூபிக்க மொசக்குட்டி மற்றும் இருட்டப்பனால் மட்டுமே முடியும் என்று சந்துரு நினைக்கின்றார்.
இதற்கிடையே இந்த வழக்கால் காவல் துறைக்கு கெட்ட பெயர் கிடைக்காமல் தடுக்க காவல்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு இயந்திரங்கள் முயல்கின்றது. ராதாகிருஷ்ணன் செங்கேணியிடம் உன் கணவர் இறந்து விட்டார். கோர்ட்டில் விபத்தில் இறந்ததாக ஏற்றுக்கொள்வார்கள். அதனால் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள சொல்கின்றார். செங்கேணிக்கு நஷ்ட ஈடாக மூன்று காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் பணம் வாங்கி கொடுப்பதாக சொல்கின்றார். செங்கேணி என் கணவனை கொலை செய்த கொலைக்காரர்களின் பணத்தில் நான் எப்படி வாங்குவது. இதை சமூகம் எப்படிப்பார்க்கும். நான் வழக்கில் தோற்றாலும் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை இந்த வழக்கை வாபஸ் பெறமாட்டேன் என்று செங்கேணி மறுத்துவிடுகின்றார்.
மூனாறிலிருந்து காவல்துறையினர் பேசியதை நினைவுபடுத்திப்பார்க்கிறார் சந்துரு. அப்போது காவல்துறையினருடன் மொசக்குட்டியும் இருந்திருக்க வேண்டும். காரணம் மொசக்குட்டிதான் ரைஸ் மில் முதலாளியிடம் பேசியுள்ளான். அப்படியானால் மூனாறுக்கு அருகில் உள்ள தமிழ் நாட்டு போலிஸ் நிலையத்தில் தான் மொசக்குட்டியும் இருட்டப்பனும் இருப்பதாக சந்தேகப்படுகின்றான் சந்துரு. அந்த அடிப்படையில் மூனாறுக்கு அருகில் இருக்கும் உடுமலை பேட்டை காவல் ஆய்வாளரும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தியும் நண்பர்கள் என்று அறிகின்றார் சந்துரு. மைத்திரியை அனுப்பி அங்கே மொசக்குட்டியும் இருட்டப்பனும் இருப்பதை கண்டுபிடித்து மீட்டு வருகின்றார்.
மொசக்குட்டி மற்றும் இருட்டப்பன் சாட்சிகள் அடிப்படையிலும் ராஜாகண்ணுவின் பிரேத பரிசோதனை செய்த டாக்டரின் சாட்சியத்தின் அடிப்படையிலும் ராஜாகண்ணுவை லாக்கப்லில் கொலை செய்ததை நிரூபிக்கின்றார்.
திருடியவர்களை அடிக்கும் போது எதிர்பாராதவிதமாக இறந்ததாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூவரும் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் விசாரணை அதிகாரி I G பெருமாள் சாமி ராஜாகண்ணு எதையும் திருடவில்லை உண்மையான திருடர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு காவல்துறையினர் பொய்வழக்கு போட்டதை நீருபிக்கின்றார்.
நீதிமன்றம் மூவரையும் தண்டிக்கின்றது. பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நிலப்பட்டாவும் செங்கேணி, உட்பட பாதிக்கப்பட்ட மொசக்குட்டி மற்றும் இருட்டப்பனுக்கு பணம் கொடுக்கவும அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகின்றது.
பாராட்டுக்குறியவை:
தமிழகத்தில் சில அடிப்படைகளில் படமெடுத்தால் வெற்றி பெறும் என்று தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டும் அடிப்படையிலான கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
காவல் துறை அவலங்களாகிய, பொய் வழக்குகள் போடுவது, குற்றவாளிகளை கொடுமைபடுத்துவது போன்ற காவல்துறை பிரச்சனைகளை வழக்கின் கோணத்தில் காட்டியுள்ளனர்.
ராஜாகண்ணு மற்றும் பார்வதி உண்மை வழக்கை அடிப்படையாக கொண்டு காவல்துறை அத்துமீறல்களை படமாக கொடுத்திருப்பது அருமை.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் பெரும்பாலும் இயக்குனர் தோல்வியுற்றே இருக்கின்றனர். ஜெய் பீம் அதிலிருந்து விலகி மக்களின் வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
செங்கேணியாக நடித்துள்ள லிஜோமோல் ஜோஸ் அந்த கதாப்பாத்திரத்திற்கு அருமையாக பொருந்தியுள்ளார். அருமையாக நடித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டின் கால கட்டத்திற்கேற்ப களத்தை மிகவும் கவனமாக ஒவ்வொரு காட்சியிலும் பின்பற்றி இருப்பார்கள்..
சந்துரு கதாப்பாத்திரத்தில் சூர்யா அழகாக பொருந்தியுள்ளார்.
பின்னனி இசையும் ஒளிப்பதிவும் அருமை, படத்தின் நகர்வுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கின்றது.
பாடல்கள் மனதை வருடிச்செல்கின்றது.
நெருடலானவை:
ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே படமாக எடுப்பது கடினமான ஒன்று. ஆனால் பல காட்சிகள் சினிமாத்தனமாக இருப்பதை உணர முடிகின்றது.
விசாரணை கமிஷன் அடிப்படையிலான விசாரணையில் இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும். அந்த காட்சிகள் அழுத்தமில்லாமல் நகர்வது போல் உணர முடிகின்றது.
அரசு தரப்பு வாதங்களில் வலிமையில்லாத காட்சியமைப்பு. வழக்காடும் விதத்தில் முற்றிலுமாக அனைத்துகாட்சிகளும் எதார்த்தத்தை மீறி கதாநாயகனின் வாதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நகர்வது கொஞ்சம் சினிமாத்தனம்.
கவனத்திற்க்குள்ளானவை:
முதல் காட்சியேலே ஜாதிய பிரிவினை அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவாதான காட்சி அமைப்பு.
இருளர் சமூகததின் வாழ்வியல் தொழிலை முறைகளை எடுத்து காட்டியுள்ளனர்.
ஒரே கல்லுல 7000 மாங்காய் என்று ஒருவர் சொல்ல 7000 மாங்காய் அல்ல மனிதர்கள் என்ற வசனம்.
ஜாதிய அரசியல் மற்றும் அதிகார மீறலை பின் புலப்படுத்தியுள்ள படம். ஆனால் ஜாதிய அரசியல் மட்டுமே இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.
ஒரு குறிப்பிட்ட ஜாதி மீது மட்டும் திருட்டு குற்றம் சொல்லும் போது திருடன் இல்லாத ஜாதி இருக்கின்றதா என்ற வசனம்.
ஒரு காட்சியில் தன் கணவனை காப்பாற்ற பணம் கொடுக்க முடியாமல் தாளியை கொடுக்க முன்வரும் போது பாம்பு கடித்து வந்த ஒருவனை பணமில்லாவிட்டால் காப்பாற்ற மாட்டாயா? என்று சந்துரு கேட்க அங்கே பணம் என்பது வெற்று காகிதம் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பார்கள்.
தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு நிலை அனைவரும் அறிந்ததே. அதற்கேற்ப ஒரு காட்சியில் IG பெருமாள் சாமி இந்தி பேசும் சேட்டு ஒருவரை தமிழில் பேச சொல்லி அடிப்பார். இது இந்தியா முழுவது பேசும் பொருளாகும் ஒரு காட்சியாக இருக்கும்.
அதே போல் வழக்கை வாபஸ்பெற செங்கேணியிடம் போலிஸ் உயர் அதிகாரி நஷ்ட ஈடு வாங்கிகொடுப்பதாக சொல்லும் போது. செங்கேணி என் கணவரை கொலை செய்ததற்காக அவர்கள் கொடுக்கும் பணம் அந்த கொலையை நியாயப்படுத்துவதாக தெரியும். வழக்கில் தோற்றாலும் பரவாயில்லை அந்த பணம் தேவையில்லை என்று சொல்லும் காட்சி.
தொகுப்பு:
பழங்குடியினர் மீதான தாக்குதல்கள், காவல்துறை அத்துமீறல், சிறை மரணம் என்று சில நிகழ்வுகள் தமிழகத்தில் தற்போது நடந்து செய்திகளானது. தமிழக மக்களின் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் அந்த செய்திகளின் தாக்கத்தை உணர்ந்து. அதற்கேற்ப ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அனைவரையும் படத்திற்குள் ஒன்றவைத்துள்ள தரமான திரைப்படம் ஜெய் பீம்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.